புதன், 26 செப்டம்பர், 2012

தெய்வ பக்தி ஏற்பட…

தெய்வ பக்தி ஏற்பட…:
"சிந்தனை செய் மனமே’ என்று ஒரு சொற்றொடருக்கு, ஏற்ப மனிதன் சதா காலமும் எதைப் பற்றியாவது சிந்தித்துக் கொண்டு தான் இருக்கிறான். இந்த சிந்தனையிலிருந்து எண்ணங்கள், ஆசைகள் உண்டாகின்றன. அவைகளை நிறைவேற்ற, உறுப்புகள் அனைத்தும் உதவுகின்றன.
இந்த சிந்தனைகளும், எண்ணங்களும் நல்லவையாக இருந்து விட்டால், தனக்கும், பிறருக்கும் பயனுள்ளதாக இருக்கும். இவை தீயவைகளாக இருந்து விட்டால், தனக்கும், பிறருக்கும் துன்பம் தான். நல்ல எண்ணங்கள் இருக்க வேண்டும்.
ஒருவரிடம் நிறைய பண வசதி இருக்கிறது. அவரது எண்ணமெல்லாம், "இவ்வளவு செல்வம் இருக்கிறதே… இவற்றை நல்ல வழியில் செலவிட வேண்டுமே’ என்று எண்ணுவார். என்ன செய்யலாம் என்று சிந்திப்பார். நம்மிடம் உள்ள செல்வம், பிறருக்கு பயன்பட வேண்டும் என்று எண்ணி, ஒரு கோவிலோ, மருத்துவமனையோ, ஒரு கல்விக் கூடமோ ஏற்படுத்துவார். பணத்தை அதற்காக செலவிடுவார்.
அவரது செல்வம் நல்ல வழியில் செலவாகிறது என்று திருப்தியடைவார். மற்றும் சிலர், தம்மிடமுள்ள பணத்தை சூதாட்டம், பிராந்திக் கடை என்று பலவிதத்தில் செலவு செய்வது உண்டு. அது, அவரவர்களின் எண்ணத்தை பொறுத்தது.
ஆனால், நல்லதையே நினைத்து, நல்லதையே செய்ய வேண்டும். இப்படி செய்ய, நல்ல பழக்கம் வேண்டும். நல்ல பழக்கம் எப்படி ஏற்படும்? நல்லவர்களோடு பழக வேண்டும், மகான்களை அண்டி, அவர்களது உபதேசம் பெற வேண்டும். தர்ம சாஸ்திரங்களை அறிய வேண்டும். அதன்படி நடக்க முயற்சிக்க வேண்டும்.
மற்றவர்கள் என்ன சொல்வரோ என்று எண்ண வேண்டியதில்லை. நல்ல பழக்க வழக்கங்களை அனுசரித்து வந்தாலே போதும்.
தவறு செய்பவன் தான், பிறரைக் கண்டு சங்கோஜப்படுவான்; பயப்படுவான். நல்லவனுக்கு எந்த பயமும் இல்லை; எதற்கும் சங்கோஜப்பட வேண்டிஇராது.
அதனால், பெரியோர்களையும், மகான்களையும், தரிசித்து, அவர்களோடு சேர்ந்தால் நல்ல பழக்கம், நல்ல புத்தி ஏற்படும். வாழ்க்கையில் இது தானே முக்கியம். அதனால், நல்ல விஷயங்களை பற்றி சிந்தனை செய்ய வேண்டும்.
நல்ல விஷயம் என்பதில் முக்கியமானது தெய்வ பக்தி. அந்த தெய்வ பக்தி இருந்தால், மனமும் தெளிவடையும். ஒவ்வொரு நாளிலும் சிறிது நேரமாவது தெய்வத்தை நினைக்க வேண்டும்.

Filed under: ஆன்மீகம்

செவ்வாய், 25 செப்டம்பர், 2012

மூன்று தேவியர் தீப மந்திரம்

மூன்று தேவியர் தீப மந்திரம்:
மூன்று தேவியர் தீப மந்திரம்







தீபச்சுடரில் லட்சுமி தேவியும், ஒளியில் சரஸ்வதி தேவியும், சுடரில் வெளிப்படும் வெப்பத்தில் பார்வதி தேவியும் எழுந்தருளுவதாக ஐதீகம். எனவே தீப தரிசனம் செய்வதன் மூலம் மூன்று தேவியர்களின் அருளையும் பெற்று கல்வி, செல்வம், வீரத்தில் சிறப்பிடம் பெறலாம் என்பது நம்பிக்கை.



ஓம் அஸதோ மா ஸத் கமய

தமஸோ மா ஜ்யோதிர் கமய

ம்ருத்யோர் மா அம்ருதம் கமய

ஓம் சாந்தி, ஓம் சாந்தி, ஓம் சாந்தி



ஓ தீன பந்து, ஆபத் பாந்தவா, அனாத இரட்சகா, என்னை அசத்யத்திலிருந்து என்னை சத்யத்திற்கு அழைத்துச் செல், அஞ்ஞான இருளிலிருந்து ஒளிக்கு அழித்துச் செல், ஜனன மரணம் என்னும் இந்த சம்சார சாகரத்திலிருந்து மோட்சத்திற்கு அழைத்துச் செல் என்ற உபநிஷத வாக்கியப்படி அஞ்ஞான இருளில் இருந்து ஞானஒளிக்கு அழைத்து செல்வதை விளக்குகின்றன தீபங்கள்.

வாழ்வில் வெற்றிபெற தியானம் செய்!!

வாழ்வில் வெற்றிபெற தியானம் செய்!!:
அனைவரும் வாழ்வில் வெற்றிபெற பலவகையில்  முயற்சி  செய்து கொண்டு  தான் இருக்கின்றோம். அவ்வாறு நாம் வெற்றிப்பெற  தியானம்  நமக்கு பெரிதும் துணைப் புரிகின்றது. தியானம் எவ்வாறு செய்வது என பார்ப்போம்.

எப்படி தியானம் செய்வது?

முக்கியமாக மூன்று விஷயங்களில் கவனமாக இருந்தால் நாம் செய்யும் தியானமானது நிச்சயம் எளிதில் கைகூடும். இதிலும் நமது பங்களிப்பு அதிகம் இருக்க வேண்டும்.

01.தியானம் செய்ய நமக்கு தேவையானது உடலிலும், உள்ளத்திலும் தூய்மையான  எண்ணம் இருக்க வேண்டும்.

02.தியானமானது எளிதில் கிடைக்ககூடிய விஷயமில்லை எனவே பொறுமை மிகவும் அவசியம், அதனை எக்காரணம் கொண்டும் இழக்க கூடாது.

03.தியானத்தை ஒருபோதும் சோம்பலின் காரணமாக கைவிடுதல் கூடாது. விடாமுயற்சியுடன் தொடரவேண்டும். நல்ல காலத்திலும், கெட்ட காலத்திலும்,உடல் நலமாக இருக்கும் போதும்,உடல் நலமில்லாத போதும் தியானத்தை மட்டும் தவறவிடக்கூடாது.

04.நாம் தியானம் செய்ய மிகச் சிறந்த காலம், பகலும், இரவும் ஒன்றுகூடும் அந்திவேளை. இந்த வேளையில்தான்  நமது உடலின் அலைகள்  அமைதியாகவும்  ஆழமாகவும் இருக்கும். எனவே இவ்வேளையில் தியானம் செய்வது முழுமையாக நமக்கு உதவும்.

05.தியானம் செய்ய ஒரு பாய் மற்றும் சுத்தமான ஒரு துணி ஆகியவற்றை சுத்தமான தரையில் விரித்து அதன் மீது அமர்ந்து கொண்டு தியானம் செய்யவேண்டும். நிமிர்ந்து முதுகினை சாய்க்காமல் மற்றும் எதன் மீதும் சாயாமல் தியானிப்பது சிறந்தது.

06.தியானம் செய்யும் போது தலையும், தோள்களும், இடுப்பும் நேர்க் கோட்டில்  இருக்குமாறு நிமிர்ந்து உட்கார வேண்டும்.அதே சமயம் முதுகெலும்பைத் தளர்ந்த நிலையிலே வைத்திருக்க வேண்டும். எந்த பொழுதும் முதுகெலும்பின் மீது தேவையில்லாத பாரத்தினையும், அழுத்தத்தினையும் தரக்கூடாது.

07.நம்மை நாம் முழுமையாக உணர்தல் வேண்டும்.நமது கால் விரல்களில் இருந்து தொடங்கி,உடலில் உள்ள ஒவ்வொரு பகுதியும் முழுமையாக உள்ளதாக நினையுங்கள். இவ்வாறு ஒவ்வொரு பகுதியும் முழுமையானதாகவும்,எந்த குறையும் இல்லாததாகவும் நினைத்து தலை பகுதி வரை மேலேற வேண்டும். பின்பு முழு உடலும் முழுமையாக உள்ளதாக நினைத்துக் கொள்ளவேண்டும்.

08. இவ்வாறு செய்து முடித்த பிறகு இரு நாசிகள் (மூக்கின் துவாரம்) வழியாக மூச்சை நீளமாக உள்ளிழுத்து பின் அதை வெளியே விடவேண்டும். மூச்சு வெளியேறியவுடன் உடல்தாங்கும் வரை மூச்சை உள்ளிழுக்காமல் வெளியே நிறுத்தி வைக்கவேண்டும். இவ்வாறு நான்கு முறை மூச்சு பயிற்சி செய்யவேண்டும்.

09.இதன் பின் மனதுக்கு அமைதி தரும் பிரார்த்தனை செய்யவேண்டும். இந்த 'மகா உலகத்தை படைத்த பரம்பொருளின் மகிமையினை எண்ணிக்கொண்டு அந்த பரம்பொருள் என்னை ஒளிரச் செய்வார்' என பலமுறை கூறியப்படியே பதினைந்து நிமிடங்கள் தியானிக்கவேண்டும்.

10. நமது மனதினை நம்முன் விரிந்து கிடக்கும் அமைதியான ஒரு நீர்ப் பரப்பாகவும், வந்துபோகும் எண்ணங்கள் அதில் தோன்றும்  நீர்க்குமிழியாகவும்  கற்பனை செய்துக்கொள்ளவேண்டும். எப்பொழுதும் எண்ணங்களை அடக்கிக்கொள்ள கூடாது. அவை தானாகவே எழும்பி அடங்கக்கூடியது.

இறுதியாக 'நான் மனம் அல்ல, நான் சிந்திப்பதை நானே உணர்கிறேன். என்மனம் செயல்படுவதைக் கவனித்துக் கொண்டிருக்கிறேன்' என்ற உயர்ந்த கருத்தினை நாம் பற்றிக்கொண்டால் இறுதியில் மனம்வேறு, நாம் வேறு என்பதை உணரமுடியும்.

இந்த நிலையினை நாம் அடைந்துவிட்டால், மனமானது நம்முடைய  வசம் வந்துவிடும்.  இந்த நிலையினை நாம் எட்டிவிட்டால் நாம் விரும்பும் எதனையும் நம் வசமாக்கிகொள்ளலாம்.

இதன் மூலம் நாம் விரும்பும் அனைத்தையும் வெற்றிக் கொள்ளலாம். வெற்றியை மட்டும் குறிக்கோளாக கொள்ளாமல் நல்ல சிந்தனையையும்  இந்த உலகிற்கு தரமுடியும்.

அனைவரும் தியானத்தை சிறுபொழுது என்றாலும் விடாமல் செய்து வாழ்வில் வெற்றிபெற வேண்டுகின்றேன்.
மூலம் & நன்றி : http://arivu-kadal.blogspot.in/2012/07/blog-post_20.html

திங்கள், 30 ஏப்ரல், 2012

வீட்டில் குறைவில்லா செல்வம் பெருக...

வீட்டில் குறைவில்லா செல்வம் பெருக...:
செல்வம், பொன், பொருள்,வியாபாரம், தொழில் அபிவிருந்தி ஆகியவற்றை அருள்பவர் லட்சுமி குபேரர்.


குபேரன் என்றால் செல்வத்தைப் பெருக்குபவன். சிவபெருமான் அவனை வட திசைக்கு அதிபதியாக நியமித்து ஆளச் செய்தார். அன்று முதல் வட திசைக்கு ஏற்றம் உண்டானது. இதனால் வாழப்பிறந்தவனுக்கு வடக்கு என்ற சொல் வழக்கு உண்டானது.


குபேரனுக்குரிய விமானம் குபேரவிமானம். இவ்விமானம் எங்கு பறந்து சென்றாலும் பொன், முத்து, நவமணிகளைச் சிந்திக் கொண்டே செல்லும். குபேரன் சிவந்த நிறமும், குள்ளமான உருவமும், புஷ்டியான செல்வச் செழிப்பும் கொண்டவராக இருக்கிறார்.


குபேர பட்டினத்திற்கு அழகாபுரி என்று பெயர். அத்தாணி மண்டபத்தில் தாமரை மலர் மீது மீனாசனத்தில் மெத்தையின் மீது குபேரன் அமர்ந்திருப்பார்.
முத்துக்குடை அவர் மீது சுழன்று கொண்டிருக்கும். அட்சய திரிதியை அன்று செல்வ வளம் தரும் லட்சுமி குபேரரை வழிபட்டால் வீட்டில் செல்வத்திருமகளின் அருள் பெருகும்.


நெல்லி மரத்தில் திருமகள் வாசம் செய்வதாக ஐதீகம். விஷ்ணுவின் அம்சமாக நெல்லிமரம் திகழ்கிறது. நெல்லிக்கனிக்கு ஹரிபலம் என்ற பெயரும் உண்டு. லட்சுமி குபேரருக்கு உரிய மரமாகத் திகழ்கிறது நெல்லி.


நெல்லிமரம் இருக்கும் வீட்டில் திருமகள் நித்திய வாசம் புரிவாள். தெய்வீக அருள் நிறைந்திருக்கும். எவ்வித தீய சக்திகளும் அணுகமுடியாது. நெல்லிமரத்தடியில் கிடைக்கும் தண்ணீர் உவர் தன்மையில்லாமல் இருக்கும். குறைவில்லா செல்வம் வீட்டில் பெருக அட்சய திரிதியை நாளில் நெல்லிமரத்தை வீட்டில் நடுவது சிறப்பு.





சூர்ய நமஸ்காரம் செய்வதால் ஏற்படும் நன்மைகள்

சூர்ய நமஸ்காரம் செய்வதால் ஏற்படும் நன்மைகள்:
*சூர்ய நமஸ்காரம் செய்வதால் உடலின் எல்லாப் பாகங்களுக்கும், உள்ளூறுப்புக்களுக்குமே நல்ல பலன்கள் கிடைக்கின்றன.


* மேலும் நரம்பு மண்டலம் அனைத்தும் நல்ல பயிற்சி பெற்று சீரான ரத்த ஓட்டம் பெறுகின்றன.


* நாடிகளெல்லாம் பலமடைகின்றன.


*அனைத்துச் தசைகளும் உருண்டு, திரண்டு வளர்ந்து உடனே கட்டழகுடன் திண்ணென்று பார்க்கப் படு கவர்ச்சிகரமாக அமைந்து விடுகிறது.


• நுரையீரலும், இதயமும் நல்ல சுவாச முறைகளைப் பெற்றதனால் வலிவடைந்து கோளாறுகளின்றி ஒழுங்காகச் செயலாற்றுகின்றன. எந்தவித நோயும் மனிதனை அண்டவே அண்டாது. 





வியாழன், 2 பிப்ரவரி, 2012

இந்திய அரசின் மின்சாரப் பொய்கள் !

இந்திய அரசின் மின்சாரப் பொய்கள் !:
கூடங்குளத்தில் அணு உலைகளை அகற்ற வலியுறுத்தி திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துகுடி மாவட்ட மக்கள் போராடி வருகின்றார்கள். இந்தப் போராட்டம் ஏதோ கடந்த சில மாதங்களாக நடந்து வரும் போராட்டம் அல்ல. இந்திய அரசு எப்பொழுது கூடங்குளத்தில் அணுமின் உலைகளை கட்டுவதற்கு முடிவு செய்ததோ, அன்றிலிருந்தே மக்கள் போராட்டம் தொடங்கிவிட்டது. கூடங்குளம் அணு உலைக்கு எதிராக 10 இலட்சம் கையெழுத்துகளை மாணவர்களும், பொதுமக்களும் திரட்டினார்கள். இதை 1989 ஆம் அண்டு இந்தியா வர இருந்த அன்றைய சோவியத் கூட்டமைப்பின் அதிபரான மிக்கைல் கோர்பசேவிடம் கையளிக்க முடிவு செய்து இருந்தனர். ஆனால் அவரை சந்திக்க இந்திய அரசு அதிகாரிகள் அனுமதியளிக்கவில்லை. 1989 மே 1ஆம் நாள் மீனவர்களும், பொதுமக்களும் கன்னியாகுமரியில் அணு உலைக்கு எதிராக அமைதியான முறையில் நடத்திய பேரணியில் காவல்துறை கண்முடித்தனமாகச் சுட்டதில் இக்னாதிசு என்பவர் உயிரிழந்தார். கூடங்குளம் அணு உலையின் ஒப்பந்ததாரரான சோவியத் கூட்டமைப்பு 1991 ஆம் ஆண்டு சிதறுண்டு பல நாடுகளாகப் பிரிந்ததால், 1991 ஆம் ஆண்டிலிருந்து 2001 ஆம் ஆண்டு வரை மக்கள் போரட்டம் ஓய்ந்து போனது. 2002 ஆம் ஆண்டிற்குப் பிறகு அணு உலைக் காட்டுமானப் பணி மெல்லத் தொடங்கியது போலவே, மக்கள் போராட்டமும் மெல்லத் தொடங்கி இன்று மூன்று மாவட்ட மக்களில் பெரும்பான்மையானோர் போராட்ட களத்தில் உள்ளார்கள்.



சாதி, மதத்தின் பெயரால் இப்போரட்டத்தைச் சீர்குலைக்க இந்திய அரசு முயன்று பயனளிக்காமல் போனதால், வெளிநாட்டில் இருந்து இவர்களுக்குப் பணம் வருகின்றது என்ற பொய்யைப் பரப்பி, போராடும் மக்களை மைய நீரோட்டத்திலிருந்து தனிமைப்படுத்தவும், தமிழக மக்களிடையே குழப்பத்தை உருவாக்கவும் தொடர்ந்து முயல்கின்றது. அரசின் கூற்றின்படி அணு உலை எதிர்ப்பாளர்களுக்கு வெளிநாட்டிலிருந்து பணம் வருகிறதென்றால், அந்நாடுகளின் பெயர்களை வெளியிட்டு, அந்நாட்டு தூதரக அதிகாரியை அழைத்து “இந்திய நாட்டு வளர்ச்சிக்கும், அமைதிக்கும் பங்கம் விளைவித்ததற்காகக் கடும் கண்டனம் தெரிவிக்க முடியுமா? பின்னர் அந்நாடுகள் அளிக்கும் பதில் திருப்திகரமானதாக இல்லாதபட்சத்தில் அந்நாடுகளுடனான (அது வல்லரசாக இருந்தாலும்) தூதரக உறவுகளையும், பொருளாதார ஒப்பந்தங்களையும் துண்டிக்க இந்தியா ஆயத்தமா?"

ஏனெனில் அரசின் கூற்றின்படி அணு ஆற்றல் தான் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு வித்திடுகின்றது. அப்படியிருக்க இந்தியாவின் வளர்ச்சிக்குத் தடையாக இருக்கும் நாடுகள் பற்றி இந்திய அரசு ஏன் இன்னும் கள்ள அமைதி காக்கின்றது? எதற்காக இந்தியா தயங்குகின்றது? மற்றுமொரு ஆயுதமாக‌த் தான் "தமிழகத்தின் வளர்ச்சிக்கு கூடங்குளம் அணு உலை தேவை", "கூடங்குளம் வந்துவிட்டால் தமிழகத்தில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் மின்சாரம் தங்கு தடையின்றி கிடைக்கும்" என்பது போன்ற பரப்புரைகளைச் செய்து வருகின்றது இந்திய அரசு. அர‌சு கூறும் "த‌மிழ‌க‌ வ‌ள‌ர்ச்சி", "எல்லா வீடுகளுக்கும் த‌டைய‌ற்ற‌ மின்சார‌ம்" என்கிற பரப்புரைக‌ளின் உண்மைத் த‌ன்மையைப் ப‌ற்றிப் பார்ப்ப‌த‌ற்கு முன் சில‌ புள்ளிவிவ‌ர‌ங்க‌ளைப் பார்ப்போம்.

தமிழகத்தின் வளர்ச்சிக்குக் கூடங்குளம் அணு உலை தேவை என்பது முழுப் பூசணியை சோற்றில் மறைக்க முயலும் செயல். நெய்வேலி அனல் மின் நிலைய உற்பத்தியில் வெறும் 30 விழுக்காடு மின்சாரம் மட்டுமே தமிழ்நாட்டிற்கு வழங்கப்படுகின்றது. மீதமுள்ள 70 விழுக்காடு மின்சாரம் அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா, ஆந்திர மாநிலங்களுக்கு வழங்கப்படுகின்றது. நெய்வேலியிலிருந்து உற்ப‌த்தியாகும் மின்சார‌த்தை ம‌ற்ற‌ மாநில‌ங்க‌ளுக்கு கொடுப்ப‌தை நிறுத்தினாலே த‌மிழ‌க‌ம் மின் உற்‌பத்தியில் உப‌ரி மாநில‌மாக‌த் திக‌ழும். இதும‌ட்டும‌ன்றி மின்சாரத்தைக் கொண்டு செல்லுதல், வழங்கலில் உள்ள (T&D Loss) தொழில்நுட்ப‌க் குறைபாடு கார‌ண‌மாக‌ மின்சார இழ‌ப்பு ஏற்ப‌டுகின்ற‌து. த‌மிழ‌க‌த்தில் இவ்விழ‌ப்பு 18%. 2010 ஆம் ஆண்டு த‌மிழ‌க‌த்தின் மொத்த‌ மின் உற்ப‌த்தி 10,214 மெகா வாட், இதில் 1,830 மெகா வாட் வீணாகியது. இந்த‌ இழ‌ப்பீட்டை 10 விழுக்காட்டிற்கும் கீழாக‌க் குறைப்பதன் மூலம் கூட‌ங்குள‌ம் அணு உலைத் திட்ட‌த்தில் த‌மிழ‌க‌த்திற்கு வ‌ழ‌ங்க‌ப்ப‌டுவ‌தாக‌ச் சொல்ல‌ப்ப‌டும் 405 மெகா வாட் மின்சார‌த்தை விட இரு மடங்கு மின்சாரம் ந‌ம‌க்குக் கிடைக்கும். அதுமட்டுமின்றி தற்பொழுதுள்ள மின்சாரத்தைத் திறமையாகப் பயன்படுத்துவதன் மூலம் குறைந்தது 1,000 மெகாவாட் மின்சாரத்தை நாம் சேமிக்க முடியும்.

த‌மிழ‌கத்தின் மின் தேவை ஆண்டிற்கு 9% என்ற அளவில் அதிகரிக்கின்றது. இந்த‌ மின்சார‌த்தை இந்திய அர‌சு காற்றாலை, உயிர்ம எரிபொருள், கதிரவன் ஒளி போன்ற‌ ம‌ர‌புசாரா மின் ஆற்றலில் பெற்றுக்கொள்ள‌லாம். ச‌ரி, த‌மிழ‌க‌ம் த‌ன்னிறைவ‌டைந்த‌ மாநில‌மாக‌ மாறிவிட்ட‌து, இந்தியாவின் மின் ப‌ற்றாக்குறையை யார் தீர்ப்ப‌து என்ற‌ கேள்வி உங்க‌ள் ம‌னதில் எழக்கூடும். இந்தியாவின் மின் ப‌ற்றாக்குறை 10 விழுக்காடு. ஆனால் மின்சாரத்தைக் கொண்டு செல்லுதல், வழங்கலில் ஏற்படும் மின் இழ‌ப்பீட்டு 40%. அதாவது 1,80,000 மெகா வாட் மின்சார‌ம் உற்ப‌த்தி செய்தால் 72,000 மெகா வாட் மின்சார‌ம் தொழிற்நுட்ப‌க் குறைபாட்டினால் வீணாகின்ற‌து (இந்தியாவிற்கு அணு தொழில்நுட்பத்தை வழங்கும் நாடுகளில் இது 10 விழுக்காட்டிற்கும் கீழ்). இது த‌மிழ‌க‌ம், ம‌காராசுட்டிரா, குச‌ராத், ஆந்திர‌ப் பிர‌தேச‌ம், க‌ர்நாட‌காவில் உற்ப‌த்தியாகும் ஒட்டு மொத்த‌ மின்சார‌த்திற்குச் ச‌ம‌ம். இந்த‌ இழ‌ப்பீட்டை 10 விழுக்காட்டிற்குக் கீழாக‌க் குறைத்த‌ல் மூல‌ம் எந்தவித புதிய மின்திட்டமும் தொடங்காமல் இன்னும் ஐந்து ஆண்டுக‌ள் இந்தியா மின் உற்ப‌த்தியில் த‌ன்னிறைவான‌ நாடாக‌த் திக‌ழும் (இந்தியாவின் ஆண்டு மின்தேவை அதிக‌ரிப்பு 3.6 விழுக்காடு). இந்த இழப்பீட்டை சரி செய்யாமல் புதிய மின் திட்டங்கள் மூலம் மின்சாரம் தயாரிப்பது என்பது "ஓட்டை வாளியில் நீரைச் சேமிப்பது" போன்றது. எவ்வளவு முயன்றாலும் இந்தியாவினால் மின்பற்றாக்குறையை சரிபடுத்தவே முடியாது.

india_solar_530

இந்தியாவின் வ‌ள‌ர்ச்சிக்கும், ம‌ர‌புசாரா எரி ஆற்றல்க‌ளான‌ காற்றாலையும், கதிரவன் ஒளியும், உயிர்ம எரிபொருளுமே சரியான வழியாகும். ஆண்டின் 365 நாட்களும் கதிரொளி கிடைக்கும் வெப்ப மண்டல நாடான இந்தியா கதிரொளியிலிருந்து எடுக்கும் மின்சாரத்தின் அளவு 1 விழுக்காட்டிற்கும் குறைவு. அதுமட்டுமின்றி சதுர மீட்டரில் ஒரு மணிநேரத்திற்கு 6.6 கிலோ வாட் மின்சாரத்தை கதிரவன் ஒளியிலிருந்து பெறும் திறன் கொண்ட தார்ப் பாலைவனத்தையும், குசராத்தின் வடக்குப் பகுதியையும் (வரைபடம் 1) கொண்ட இந்தியா, தார்ப் பாலைவனத்தில் 60 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் கதிரவன் ஒளி மின் பண்ணையை வைப்பதன் மூலம் கிடைக்கும் மின்சாரத்தின் அளவு 3,00,000 மெகாவாட். தார்ப் பாலைவனத்தையும், குசராத்தின் வடக்குப் பகுதியில் கிடைக்கும் கதிரவன் ஒளியையும் முழுமையாகப் பயன்படுத்தி மின்சாரம் எடுத்தால், இந்தியா மின்சாரத் தன்னிறைவு அடைவது மட்டுமின்றி அண்டை நாடுகளுக்கு மின்சாரத்தை விற்கவும் இயலும்.

India_wind_540

இந்திய அரசின் காற்றாலை மின்னுற்பத்திக் கூட்டமைப்பின் கணிப்பீட்டின்படி இந்தியாவில் காற்றாலைகள் மூலம் 65,000 மெகாவாட் மின்னுற்பத்தி செய்யமுடியும் (வரைபடம் 2) – இந்தியாவில் காற்றாலை மின்னுற்பத்திகான வாய்ப்புகளை காட்டுகின்றது ( http://www.inwea.org ). ஆனால் இந்தியா 14,500 மெகாவாட் மட்டுமே உற்பத்தி செய்கின்றது (இதில் 35 விழுக்காடு தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படுகின்றது), இதுமட்டுமின்றி உயிர்ம எரிபொருளில் இருந்து 21,000 மெகாவாட் மின்சாரம் தயாரிக்க முடியும், மேலும் மின்சாரத்தைத் திறமையாகப் பயன்படுத்துதன் மூலம் பல ஆயிரம் மெகாவாட் மின்சாரத்தைச் சேமிக்க முடியும்.

இதை எல்லாம் விடுத்து பேரழிவு அணு உலைக‌ளை இந்தியா நிறுவ‌த் துடிப்ப‌து ம‌க்க‌ளுக்காகவா? அல்ல‌து இந்திய‌, ப‌ன்னாட்டு பெருமுத‌லாளிக‌ளுக்காக‌வா என்ற‌ கேள்வி எழுகின்ற‌து. ஏனெனில் இந்த‌ அணு மின் உலைக‌ளுக்கான‌ யுரேனிய‌ இற‌க்கும‌திக்கான‌ 1,2,3 ச‌ட்ட‌த்திற்கு இட‌துசாரிக‌ள் ஆத‌ர‌வ‌ளிக்க‌ ம‌றுத்த‌பொழுது ப‌ல இல‌ட்ச‌ங்க‌ள் பாராளும‌ன்ற‌ உறுப்பின‌ர்க‌ளுக்கு கைமாறி பாராளுமன்றத்தில் பெரும்பான்மை நிலைநாட்டப்பட்டு இச்ச‌ட்ட‌ம் நிறைவேற்ற‌ப்ப‌ட்ட‌து க‌ண்கூடு. இந்தியாவில் கட்டப்படும்‌ புதிய‌ அணு உலைக‌ளுக்கான‌ ஒப்ப‌ந்த‌த் தொகையாக 1,40,000 கோடி ரூபாயை பன்னாட்டு நிறுவனங்களுக்கு இந்திய அரசு கொடுக்கின்றது. மேலும் அணு ஆற்றல் துறைக்கு இந்திய‌ அர‌சு ஆண்டிற்கு ப‌ல இல‌ட்ச‌ம் கோடிக‌ளை மானிய‌மாக‌க் கொடுத்து வ‌ருகின்ற‌து. எடுத்துக்காட்டாக கூடங்குளம் அணு உலையைக் கட்டுவதற்கு 7,000 கோடி ரூபாய் செலவு ஆகும் என திட்டமிடப்பட்டு 12,000 கோடி ரூபாய் செலவு ஆகியுள்ளதாக முதலில் கூறப்பட்டது, இதுவே பின்னர் 13,000, 14,000 கோடி ரூபாய் என அதிகரித்துக் கொண்டே உள்ளது. இறுதியாக 20,000 கோடி ரூபாய் வரை இது செல்லக்கூடும். 40 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்த அணு உலையை மூடுவதற்கு சற்றேறக்குறைய 40,000 கோடி ரூபாய் செலவு ஆகும் என்று கொண்டால், இந்த அணுவுலைக்கு மட்டுமே 60,000 கோடி ரூபாய் செலவாகின்றது. இது மட்டுமின்றி அணு உலை செயற்படுவதற்காக ஆகும் செலவு, யுரேனிய எரிபொருளுக்காகும் செலவு, அணு உலைக் கழிவுகளைப் பராமரிக்க ஆகும் செலவு என எல்லாம் இருக்கின்றன. இப்பொழுது நீங்களே சொல்லுங்கள் அணு மின்சாரம் மலிவானதுதானா?

மேலும் கூடங்குளத்தில் அணு உலை கட்டக்கூடாது என்று முதலில் இரசியா கூறியுள்ளது. இதற்கான காரணம் அந்த நிலத்தின் கீழே வெற்றுக் குழிகள் உள்ளன, இந்த நிலத்தின் பாறை உறுதியானது அல்ல, நிலநடுக்கம் ஏற்படும் வாய்ப்பும் உள்ளது. கடற்கரையை ஒட்டிக் கட்டப்பட்டுள்ளதால் சுனாமியால் பாதிக்கப்படும் வாய்ப்பும் உள்ளது. இதை எல்லாம் விட இது போன்ற இயற்கைப் பேரழிவுகளால் மட்டுமல்ல போபாலில் ஏற்பட்டது போல மனிதத் தவறுகளினாலும் அணு உலையில் நேர்ச்சி (விபத்து) ஏற்படக்கூடும். எல்லாவற்றிலும் தான் ஆபத்து உள்ளது எனச் சிலர் கூறுகின்றார்கள், அவர்களுக்கு அணு உலையினால் ஏற்படும் பேரழிவுகள் பற்றித் தெரியவில்லை. அண்மையில் ஏற்பட்ட புகுசிமா விபத்தின் காரணமாக ஏற்பட்டக் கதிர்வீச்சு உலகம் முழுவதும் பரவியுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.(1) மேலும் அணு உலை விபத்து ஏற்படும்பொழுது பல்லாயிரக்கணக்கில் மக்கள் இறப்பது மட்டுமல்லாமல், இந்தத் தாக்கம் தலைமுறை தலைமுறையாக மக்களை இலட்சக்கணக்கில் கொல்லும். இதுமட்டுமின்றி அணு உலைகள் செயற்படும் பொழுது தொடர்ச்சியாக உமிழும் கதிர்வீச்சினால் அணு உலையைச் சுற்றி வாழும் மக்களுக்குப் புற்றுநோய் போன்ற நோய்கள் ஏற்படும், இதனால் அவர்கள் இறக்கக்கூடும், அண்மையில் கல்பாக்கம் அணு உலைக்கு அருகில் குடியிருக்கும் சிலர் இறந்ததற்கு அணு உலையினால் வெளியிடப்பட்ட கதிர்வீச்சே காரணம் என அணு ஆற்றல் துறை ஒப்புக்கொண்டுள்ளது (2). அதுமட்டுமின்றி அணுக் கழிவுகள் இரண்டு இலட்சம் ஆண்டுகளுக்குக் கதிரியக்கத்தை வெளியிடும்.

இறுதியாக வளர்ச்சி பற்றிய ஒரு புள்ளிவிவரம். தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளில் மட்டும் 5 இலட்சம் ஏக்கர் விவசாய நிலம் காணாமல் போயுள்ளது, கடந்த ஒரு ஆண்டில் மட்டும் 10 விழுக்காடு விவசாய நிலம் காணாமல் போயுள்ளது(3). விவசாயத்திகு மின்சாரம் சரியாக வழங்கப்படாததும் இதற்கு ஒரு காரணமாகும். சிறு, குறு தொழிலகங்களுக்கு பகல் வேலை நேரத்தில் வெறும் மூன்றுமணி நேரமே மின்சாரம் கிடைக்கின்றது. இதனால் பல தொழிலகங்கள் மூடப்பட்டுவிட்டன. ஆனால் இதே நேரத்தில் தமிழகத்தில் ஆண்டிற்கு 9.21% அன்னிய மூலதனம் உள்ளே வந்து கொண்டிருக்கின்றது(4), அதாவது பன்னாட்டு நிறுவனங்கள் வளர்ந்து கொண்டிருக்கின்றன. ஏனென்றால் அவர்களுக்கு 24 மணிநேரத் தடையற்ற மின்சாரம் வழங்கப்படுகின்றது. கூடங்குளம் போன்ற திட்டங்களினால் கிடைக்கும் 405 மெகாவாட் மின்சாரம் கூட அவர்களுக்குத் தானே தவிர, தமிழக விவசாயிகளுக்கோ, சிறு தொழிலகங்களுக்கோ, வீடுகளுக்கோ அல்ல.

கூடங்குளம் மக்கள் இந்திய அரசுக்கு எதிராக மட்டுமல்ல பன்னாட்டு நிறுவனங்கள், உலக ஏகாதிபத்தியங்கள் என பல மறைமுக எதிரிகளை எதிர்கொண்டு நம்முடைய இயற்கை வளங்களையும், உரிமைகளையும் பாதுகாக்கப் போராடி வருகின்றார்கள். இந்த நிலையில் முதன்மையாக நாம் செய்ய வேண்டியது, அணு உலைக்கு எதிராகப் போராடும் மக்களின் கைகளை வலுப்படுத்துவதும், அவர்களுக்கு ஆதரவான குரல்களைத் தொடர்ந்து வெளிபடுத்துவதும் தான்; அத்தோடு மின்னுற்பத்திக்கான ஒரே வழி பேரழிவை ஏற்படுத்தும் அணு உலை தான் என்ற மாயையலிருந்து இந்தியாவையும், தமிழ்நாட்டையும் மீட்டு காற்றாலை, கதிரவன் ஒளி போன்ற அளவில்லாத மரபு சாரா எரிஆற்றல்களின் மூலம் மின்னுற்பத்தி செய்ய நெருக்குதலுக்கு உள்ளாக்குவதும் தான்.

மக்கள் போராட்டம் ஓங்குக !!!

- ப.நற்றமிழன்
தமிழர்ப் பாதுகாப்பு இயக்கம் (Save Tamils Movement)
தரவுகள்:

திருவண்ணாமலை தீர்த்தங்கள்!

திருவண்ணாமலை தீர்த்தங்கள்!:


தெய்வத் திருமலை திருவண்ணாலையில் கண்ணுக்குத் தெரிந்தும் தெரியாமலும் முந்நூற்று அறுபது தீர்த்தங்கள் இருக்கின்றனவாம்.

இந்தத் தீர்த்தங்களிலே கங்கை, யமுனை, சரஸ்வதி, கோதாவரி, நர்மதா, சிந்து, காவேரி முதலான புனித நதிகள் திருவிழாக் காலங்களில் வந்து கலப்பதாக புராணங்கள் விரிவாக எடுத்துக் கூறுகின்றன. அவற்றுள் சில:

திருவண்ணாமலையின் கிழக்கே இந்திரனால் உண்டாக்கப்பட்ட தீர்த்தம் ஒன்று உள்ளது. இது இந்திர தீர்த்தம் எனப்படும். இத்தீர்த்தத்தில் தைப்பூசத்தன்று நீராடி ஒரு கையளவு நீர் உட்கொண்டால் கோடி பிரம்மஹத்தி தோஷம் போகும். அங்கு நீராடிய இந்திரன் தன் குற்றங்கள் நீங்கப்பெற்று தொடர்ந்து இந்திரப் பதவியை வகிக்கும் பேறு பெற்றான்.

திருவண்ணாமலைக்குத் தென்கிழக்கில் அக்னி தீர்த்தம் என்று ஒரு தீர்த்தம் உண்டு. அதில் பங்குனி மாதம் பௌர்ணமி நாளில் மூழ்கி எழுந்தால் எப்பேர்ப்பட்ட பாவமும் நீங்கும். அறமும் தவமும் வந்து சேரும். அக்னிதேவன் தனக்கு ஏற்பட்ட பாவத்தை இந்தத் தீர்த்தத்தில் மூழ்கி இறைவனை வழிபட்டு போக்கிக் கொண்டான்.

திருவண்ணாமலையின் நிருதி மூலையில் நிருதி தீர்த்தம் இருக்கிறது. இத்தீர்த்தத்தில் மூழ்குபவர்களுக்கு பகை நீங்கும் என்று சொல்லப்படுகிறது. நிருதியானவள் இத்தீர்த்தத்தில் மூழ்கியதன் பயனாக நெருப்பு போன்ற கண்களையும், பிளந்த வாயினையும் உடைய ஒரு ராட்சஸப் பேயை தன் வயமாக்கிக் கொண்டான்.

திருவண்ணாமலைக்கு மேற்கு திக்கில் வருண தீர்த்தம் என்று ஒன்றுண்டு அதில் பக்தியோடு மூழ்கி எழுந்தால் ஒன்பது கிரகங்களும் நன்மையைச் செய்யும். அந்த ஒன்பது கிரகங்களும் அதன்படி மூழ்கி வேண்டிய வரங்களைப் பெற்றனவாம். அத்தீர்த்தத்தின் வாயு திசையில் வாயு தீர்த்தம் இருக்கின்றது. அத்தீர்த்தத்தில் மூழ்கினால் சகல துன்பங்களும் தீரும் என்பர்.

திருவண்ணாமலையில் வடதிசையில் குபேர தீர்த்தம் என்றொரு தீர்த்தம் உண்டு. அதில் மூழ்கி எழுந்தால் சகல பாவங்களும் நீங்கி மேலான நிலையை அடைவதோடு சிவபெருமானின் பாதங்களைச் சேர்வார்கள்.

திருவண்ணாமலையில் எமன் தீர்த்தத்திற்குத் தெற்கே அகத்தியத் தீர்த்தம் இருக்கிறது. புரட்டாசி மாதத்தில் அதில் மூழ்கி நீராடி தீர்த்தம் அருந்தினால் பெரும் பண்டிதர் ஆவார் என்றும்; திருமகளும் கலைமகளும் அவரிடத்திலே வந்து தங்கியிருப்பார்கள் என்றும் சொல்லப்படுகிறது.

திருவண்ணாமலையில் குபேர தீர்த்தத்தின் அருகே வசிட்ட தீர்த்தம் என்று ஒரு தீர்த்தம் உண்டு. அதில் நீராடிய வசிஷ்ட முனிவர் முனிவர்களுக்கெல்லாம் தலைமையைப் பெற்றார். அத்தீர்த்தத்தில் மூழ்கியவர்களுக்கு எல்லா சாஸ்திரங்களும் விளங்கும்.

திருவண்ணாலையின் வடக்கு பக்கத்தில் திருநதி என்று ஒரு நதியுண்டு. அதில் திருமகளான லட்சுமிதேவி மூழ்கி எழுந்ததால் திருமாலின் மார்பினைச் சேர்ந்தார்.

நர்மதை ஆற்றினால் வணங்கப்படும் சோணம் என்ற ஒரு நதி அண்ணாமலையின் தெற்கே இருக்கிறது. அதில் கங்கை, யமுனை, காவிரி ஆகியோர் வந்து மூழ்கித் தங்கள் துன்பத்தைப் போக்கிக் கொண்டார்களாம்.

திருவண்ணாமலையின் மேற்கு திசையில் புண்ணியநதி என்று ஒன்று உண்டு. அதன் அருகே புண்ணியாற்றூர் என்று ஒரூர் இருக்கிறது. அங்கு வாழ்ந்த ஈழன் என்ற அரசன் தனக்கு தீங்காக வந்தடைந்த பெண் உருவை அந்நதியில் மூழ்கிப் போக்கிப் பெரும் பேறு பெற்றான். இப்புண்ணிய நதிக்கு வடப்பக்கம் சேயாறு என்ற ஆறு உள்ளது. அது முருகப் பெருமானால் உண்டாக்கப்பட்டது என்பர். அதில் முருகப் பெருமானே மூழ்கி எழுந்து அசுரர்களைக் கொல்லும் வரமும் தேவசேனாதிபதி என்ற பேறும் பெற்றார்.

திருவண்ணாமலைப் பெருமான் கோயிலில், உள்ளே சிவகங்கைத் தீர்த்தம் என்று ஒரு தீர்த்தம் உண்டு. இதனை தினந்தோறும் உள்ளத்தில் நினைத்தால் கங்கை நதியில் மூழ்கிய பயன் உண்டாகும். அநேக உருத்திரர்கள் அதில் மாசி மாதத்தில் மூழ்கி இடபாரூடராய் எல்லா தேவரினும் மேலான பேறு பெற்றார்கள்.

திருவண்ணாமலையில் உள்ள சிவகங்கை தீர்த்தத்தின் கிழக்கே சக்கர தீர்த்தம் இருக்கிறது. திருமால் வராக அவதாரம் எடுத்தபோது அதில் நீராடினாராம். அதில் நீராடுவோரும், அந்நீரை அருந்தியவர்களும் அதனை வலமாக வந்தவர்களும் துயரக்கடல் நீங்கி சிவபெருமானின் திருவடிகளைச் சேர்வர்.

திருவண்ணாமலையார் சன்னதியில் அக்னி திசையில் பிரம்மதேவனால் அமைக்கப்பெற்ற பிரம்ம தீர்த்தம் ஒன்றுண்டு. அதில் மூழ்கியவர்கள் பிறவிக் கடலில் நீந்தி சென்ற பிறப்புகளில் சேர்ந்த தீவினைகள் அனைத்தும் நீங்கப் பெறுவர். அந்த பிரம்ம தீர்த்தத்தில் மூழ்கி அணுவளவுப் பொன்னை தானம் கொடுப்பாராயின், நவமணிகள் நிறைந்த நிலவுலகத்தையே ஒரு அடியவருக்குக் கொடுத்த புண்ணியத்தை அடைவர். இத்தீர்த்தத்தில் மூழ்கி எழுந்து தானங்களைச் செய்தவர்கள் சிவபெருமானின் திருவடித் தாமரையை அடைவார்கள்.

விநாயகர், முருகன், சூரியன், சந்திரன், கங்கை, பார்வதி, பைரவர், சப்த கன்னியர், அட்டவசுக்கள், தேவர்கள் ஆகியோர் மூழ்கி எழுந்த தீர்த்தங்கள் பலவுண்டு. அவற்றின் பெருமையை வேதங்களும் அறியாது.

திருக்கோயில்களில் நடைபெறும் திருவிழாக்களில் தீர்த்தவாரி என்பது ஒரு முக்கிய நிகழ்வாகும். இறைவனையும் இறைவியையும் தரிசித்தவர்கள் இருவினையும், மும்மலங்களும் அடங்கி இறைவியின் திருப்பாதம் பெற்று பேரின்பத்தில் மூழ்குவர் என்பதாகும். இதன் அடிப்படையில்தான் பத்தாவது நாளில் தீர்த்தவாரி என்ற நிகழ்ச்சி திருக்கோயில்களில் நடைபெற்று வருகிறது.

தீர்த்தவாரி நடைபெறும்போது மக்களின் ஆன்மா குளிர்ச்சியடைகிறது. அதாவது இறைவனோடு இறைபக்தியும் சேர்கிறது. திருவண்ணாமலை திருக்கோயில் இறைவன் மணலூர்பேட்டை சென்று தீர்த்தமாடுவதும், கலசப்பாக்கம் சென்று தீர்த்தமாடுவதும் அந்தந்த ஆற்றிற்கு சிறப்பாகும்.

எல்லா நதிகளும் அங்கு ஒன்றாகக் கலந்து இறைவனை வழிபடுவதாக அர்த்தம். ஆக, தீர்த்தவாரி என்பது மிகவும் முக்கியமானதாகும். லட்சக்கணக்கான பக்தர்கள்கூடி இறைவன் தீர்த்தவாரி செய்து அபிஷேக, ஆராதனைகள் நடைபெறும்போது தாங்களும் நீராடுவதால் தங்களுடைய பாவங்களைத் தீர்த்தது போல் ஓர் உள்ளுணர்வு ஏற்பட்டு மனநிம்மதி அடைகின்றனர்.



Filed under: ஆன்மீகம்

புதன், 18 ஜனவரி, 2012

தம்பதியர் ஒற்றுமையை பலப்படுத்தும் விநாயகர்

தம்பதியர் ஒற்றுமையை பலப்படுத்தும் விநாயகர்:






ஆசியாவிலேயே மிகப்பெரிய விநாயகர் கோவில் திருநெல்வேலியில் தாமிரபரணி ஆற்றங்கரையில், மணிமூர்த்தீசுவரம் என்ற இடத்தில் அமைந்துள்ளது. இங்கு உச்சிஷ்ட கணபதியாக விநாயகர் அருள்பாலிக்கிறார். 2 ஏக்கர் பரப்பளவில் ஆலயம் அமைந்துள்ளது.


பொதுவாக தனியாக எழுந்தருளி அருள்பாலிக்கும் விநாயகர் இங்கு அம்பாளுடன் எழுந்தருளுயுள்ளார். ஸ்ரீ நீலா வாணி என்பது இங்குள்ள அம்பாளின் பெயர். தம்பதி சமேதராக காட்சி தரும் இந்த விநாயகரை வழிபட்டு வந்தால் பக்தர்களின் இல்லற வாழ்க்கை சிறப்பாக இருக்கும் என்கிறார்கள்.


குழந்தை பாக்கியம் தள்ளிக் கொண்டே போகிறது என்று ஏங்கும் தம்பதிகள், இங்கு வந்து வணங்கினால், வீட்டில் மழலை தவழும் யோகம் விரைவில் கூடி வரும் என்பதும் ஐதீகம்.


மேலும், செல்வம் பெருகுவதற்கு கொழுக்கட்டையும், குழந்தை வரத்திற்கு சர்க்கரை பொங்கலையும், நோய்கள் தீர வேண்டும் என்றால் கரும்புச்சாற்றையும் இங்கு நைவேத்தியம் செய்வதை காண முடிகிறது.



Filed under: ஆன்மீகம்