புதன், 2 நவம்பர், 2011

வாழ்க நகைச்சுவை !

வாழ்க நகைச்சுவை !:

இந்த வார துக்ளக் ஆசிரியருக்கு ப.சிதம்பரம் எழுதியுள்ள கடிதம்

அன்புள்ள ஆசிரியர் அவர்களுக்கு,


துக்ளக் 19.10.2011 இதழில் வெளியான கேள்வி–பதில் பகுதியைப் படித்தேன். கேள்வி கேட்ட சென்னையைச் சேர்ந்த நண்பர் ஆர்.நாகராஜன் அவர்களுக்கு நகைச்சுவை உணர்வு இல்லையே என்று வருத்தம் அடைந்தேன். தங்களுடைய பதிலைப் பார்த்தவுடன் தங்களுக்கு நகைச்சுவை உணர்வு இருக்கிறது என்பது ஆறுதல் அளித்தது. அந்த மகிழ்ச்சி நீண்ட நேரம் நீடிக்கவில்லை. 27-ஆம் பக்கத்திலும் மற்றும் 35-ஆம் பக்கத்திலும் வெளியான கேலிச் சித்திரங்களைப் பார்த்த பிறகு, தங்களுடைய ஆசிரியர் குழுவில் பலருக்கு நகைச்சுவை உணர்வு இல்லையோ என்று கேட்கத் தோன்றுகிறது.

‘வாழ்க நகைச்சுவை’ – என்று சொல்லும் காலம் வரும் என்று நம்புகிறேன். மிக்க நன்றி!

– ப. சிதம்பரம்,
உள்துறை அமைச்சர், புதுடெல்லி.


அவர் குறிப்பிட்டுள்ள கேள்வி பதில், கார்ட்டூன் கீழே....


கேள்வி-பதில்

ஆர். நாகராஜன், சென்னை-117

கே : ‘எனக்குச் சற்று ஞாபக மறதி உள்ளது’ – என்று உயர்ந்த பொறுப்பில் இருக்கும் ப.சிதம்பரம் பகிரங்கமாகக் கூறுகிறாரே?

ப : 2ஜி விவகாரத்தில் ஏல முறையை வற்புறுத்த சிதம்பரம் தவறினார் என்ற குற்றச்சாட்டைக் கூறுகிற நிதியமைச்சகத்தின் குறிப்பு பற்றியும், பின்னர் பிரணாப் முகர்ஜிக்கும் சிதம்பரத்திற்கும் ஏற்பட்ட ‘சமாதானம்’ பற்றியும், நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்குப் பதில் அளிக்கையில்தான், சிதம்பரம் ‘தனக்கு ஞாபக மறதி’ என்று கூறினார்.

நிருபர்களின் சில கேள்விகளுக்குப் பதில் அளிக்க விரும்பாதவர்கள், ‘இது பற்றி எதுவும் சொல்வதற்கில்லை’ என்று கூறுவார்கள். அல்லது ‘இப்போது கருத்து தெரிவிக்கவில்லை’ என்று கூறுவார்கள். சிலர் வேறு விதங்களிலும் பதில் சொல்வார்கள். அந்த மாதிரிதான் சிதம்பரமும் ‘தனக்கு ஞாபக மறதி’ என்று கூறியும், ‘தனக்கு கணக்குத் தெரியாது’ என்று சொல்லியும் சில கேள்விகளைத் தவிர்த்தார்.

இதை ஒரு நகைச்சுவையாகத்தான் எடுத்துக் கொள்ள வேண்டுமே தவிர, சீரியஸாக எடுத்துக் கொண்டு, ‘சிதம்பரத்திற்கு ஞாபக மறதியா? அவருக்குக் கணக்குத் தெரியாதா?’ என்று கேட்பதில் அர்த்தமில்லை.

கார்டூன்



2G ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு, அப்பப்போ குண்டு வெடிக்கும் போது தரும் அறிக்கையைவிடவா இது பெரிய நகைச்சுவை ? வாழ்க நகைச்சுவை! என்று சொல்லும் காலம் நிச்சயம் வரும்!



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக