சனி, 3 செப்டம்பர், 2011

உயிரினும் இனிய பெண்மை -தாயான பெண்களுக்கான சில குறிப்புகள்.

உயிரினும் இனிய பெண்மை -தாயான பெண்களுக்கான சில குறிப்புகள்.:
முதலில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். 'உயிரினும் இனிய பெண்மை' மருத்துவ பதிவிற்கு கிடைத்த ஆதரவிற்கு நன்றி. இது தொடர்பாக சில கேள்விகள் வந்திருந்தன. அவற்றில் தனிப்பட்ட சில கேள்விகளுக்கு நான் பதில் தந்துவிட்டேன். பொதுவான சில கேள்விகளுக்கான பதில்களை இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன். அவை...
1. இது பயப்படவேண்டிய மனோ வியாதியா? இது பயப்படவேண்டிய வியாதியல்ல. கவனிக்க வேண்டிய வியாதி. மேலும் இது நிரந்தரமானது அல்ல. ஹார்மோன் அளவு சீரானபின் சரியாகிவிடுவார்கள். இடைப்பட்ட காலத்திற்குள் நாம் கவனமாக பார்த்துக்கொண்டால் போதும். 2. நான் தனிமையிலிருக்கும் தாய்மையடைந்த பெண். இது போன்ற பிரச்சினையை உணர்ந்து சீர் செய்ய என்ன வழி?

நீங்கள் தனிமையில் இருக்கிறீர்கள் எனில் சில குறிப்புகளை உணருங்கள். சோகம், கோபம், எரிச்சல், சோர்வு, சந்தேகம் போன்ற உணர்வுகள் உங்களை அலைக்கலைத்தால் போஸ்ட்போர்டம் அழுத்தம் இருக்கலாம். இது போன்ற உணர்வுகள் சாதாரணமான பெண்களுக்கும் வரலாம். ஆனால் எல்லை மீறி வெளிப்பட்டால் மட்டுமே கவலைப்பட வேண்டும். ஏதோ தவறு நடக்கிறது என்பதையும் கட்டுபடுத்த முடியாத இயலாமையையும் நீங்களே உணர்வீர்கள். பிரசவத்திற்கு பிறகான மாதசுழற்சியை கவனியுங்கள். மாதவிடாய் போக்கின் அளவும் பழைய நிலையிலேயே இருக்க வேண்டும்.


- உங்களுக்கு மிக நெருக்கமானவருடன் இது பற்றி லந்தாலோசிக்கலாம். கணவர், தோழி, சகோதரி போன்றவர்கள். இவர்கள் உங்களுடைய மாற்றத்தை சரியாக எடைபோட்டுவிடுவார்கள்.
-குழந்தை வளர்ப்பு பற்றி அறிந்தவர்களை உங்களுக்கு உதவியாக வைத்துக் கொள்ளுங்கள். வயதான பெரியவர்களை அருகில் வைத்துக் கொள்ளுங்கள். அவர்களின் ஆலோசனையை கேளுங்கள்.
- உங்களை அலைக்கலைக்கும் சிந்தனைகளை உடனேயே ஆக்ரோசமாக வெளிப்படுத்தாமல், ஒரு சிறிய நோட்டில் குறித்து வையுங்கள். உணர்வுகளின் பிடியிலிருந்து தற்காலிகமாக நீங்கள் வெளிவரும்போதெல்லாம் - நார்மல் ஆக இருக்கும் சமயங்களில் - அதனை வாசித்துப் பாருங்கள். தேவையில்லாத குப்பைகளை ஒதுக்கித் தள்ளும் பக்குவம் நாளடைவில் கிட்டிவிடும்.
- தியானம் செய்வது, தெய்வ காரியங்களில் ஈடுபடுவது ஒரு சிந்தனை மாற்றத்தைத் தரும்.

- தனித்து இருந்தாலும் பாலைவனத்தில் இல்லையல்லவா, உங்கள் வீட்டிற்கு அருகில் இருப்பவர்கள் அல்லது வேலை பார்க்கும் இடத்தில் உள்ள மற்ற பெண்களிடம் இணக்கமாக இருங்கள். அவர்கள் இது போன்ற சிக்கல்களிலிருந்து மீண்டு வந்த அனுபவத்தை பகிர்ந்து கொள்வார்கள். - மருத்துவரை அணுகுங்கள் - அவர் மகப்பேறு மருத்துவராக இருப்பது நல்லது. அவர் போதுமான கவுன்சிலிங் தருவார். தன்னிச்சையாக மனபதட்டத்தை குறைக்கும் மருந்துகளையும், ஹார்மோன் மருந்துகளையும் எடுத்துக் கொள்ளாதீர்கள் -மருத்துவர் கூறினால்கூட ஹார்மோன் மருந்துகளை தவிர்க்கவும். பிற்பாடு பிரச்சினை எழலாம். - புதிதாக தாயாகும் பெண்களுக்கே உரிய ஒரு தவறான சிந்தனையை விலக்குங்கள். அது என்னவென்றால், 'நான் ஒரு சிறப்பான தாயாக இருப்பேன். என் குழந்தையை மிக சிறப்பாக வளர்ப்பேன்' என்பதுதான். ஏனெனில் இந்த சிந்தனை அனுபவமிக்க மற்றவர்களின் கருத்துக்களை புறந்தள்ளத் தூண்டும். மற்றவர்களை குறை சொல்லத் தூண்டும். 3. இதற்கான கைவைத்தியம், பத்திய உணவு பற்றி தெரிவியுங்கள்:

பொதுவாகவே உங்கள் மருத்துவர் சொல்லும் உணவு வகைகளை எடுத்துக் கொள்ளுங்கள். வாயுத் தொல்லை உள்ள வகைகள் - கிழங்கு வகைகள், பட்டாணி, சோயா போன்றவற்றை தவிர்த்திடுங்கள். எளிதில் சீரணிக்ககூடியவற்றை உண்ணுங்கள். தாய்ப்பால் தருவர்கள் எனில் இவை குழந்தையின் உடல் நிலையை பாதிக்கும்.. அதுவும் கூடுதலாக கவலைப்படவைக்கும். சூப் வகைகள், குறிப்பிட்ட மீன் வகைகள் மிக நல்லது.


ஹார்மோன் குறைபாட்டினை சரிசெய்ய வெந்தயக்களி செய்து சாப்பிடலாம். களி செய்யும் முறை.
இரண்டு மேஜைக் கரண்டி வெந்தயத்திற்கு, மூன்று பங்கு அரிசி சேர்த்து ஊறவையுங்கள். நன்றாக நீர் விட்டு தோசை மாவு பதத்திற்கு அரைத்துக் கொள்ளுங்கள். ஒரு பாத்திரத்தில் இட்டு, அடுப்பில் வைத்து மிதமான தீயில் கிளறிக் கொண்டே இருங்கள். மாவு நிறம் மாறி வெந்த அடையாளம் தெரியும். நீரில் கைவத்து களியினை தொட்டால் ஒட்டிக் கொள்ளாது. இந்த பதத்தில் இறக்கிவிடுங்கள். ஒரு தட்டில் பரப்பி நடுவில் சிறு குழி செய்து கொண்டு அதில் நல்லெண்னையும், பனை வெல்ல பாகு( சூடான கரைசலாக இருந்தாலே போதும்) ஊற்றி மிதமான சூட்டில் ஸ்பூனில் எடுத்து சாப்பிடுங்கள். வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும். சற்று கசக்கும் தேவையென்றால் பனைவெல்லப்பாகை சேர்த்துக் கொள்ளுங்கள். இது கருப்பையை உறுதிபடுத்தும், ஈஸ்ட்ரோஜனை நிலைப்படுத்தும், வயிற்றுக் கோளாறுகளை போக்கும், பனைவெல்லம் சேர்ப்பதால் குளிர்ச்சியும், இரத்தஓட்டம் சீராகுதலும் கூடுதல் நன்மைகளாக கிட்டும்.

உடலும் உள்ளமும் உறுதிபட்டுவிட்டால், நாளை இது போன்றவர்களுக்கு நாம் வழிக்காட்டியாக இருக்கலாமல்லவா? மற்றவர்களுக்கும் உதவி செய்யுங்கள். இது போன்ற செய்திகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக