செல்வந்தர் யார்?
செல்வம் நிறைந்தவரெல்லாம் செல்வந்தராகமுடியாது!
நல்ல நட்புகளும், உறவுகளும் நிறைந்தவர் மட்டுமே செல்வந்தராக முடியும்!
காலந்தோறும் செல்வம்.
1. குழந்தைச் செல்வம்!
2. நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்!
3. கல்வியே அழியாத செல்வம்!
4. ஆடு, மாடுகளே செல்வம்!
5. நிலங்களே செல்வம்!
6. பணம் தான் செல்வம்!
என காலந்தோறும் செல்வத்தின் மதிப்பு மாறிக்கொண்டேதான் இருக்கிறது.
ஆசை.
வாழ்ககையி்ல் பொருட் செல்வம் கிடைக்காதவர்கள், செல்வத்தின் மீது ஆசை கொண்டவர்கள் தம் பி்ள்ளைகளுக்கு பெயரிலாவது செல்வம் இருக்கட்டுமே என்று...
செல்வம், அருள் செல்வம்,அன்புச் செல்வம், அறிவுச் செல்வம், ஞானச் செல்வம், செல்வமுரளி, செல்வ கணபதி, செல்வி என்றெல்லாம் பெயர் வைப்பதை வழக்கில் காணமுடிகிறது.
செல்வத்தை எங்கு மறைத்து வைப்பீர்கள்..?
இன்றைய சூழலில் ஊடகங்களில் கேட்கும் தினசரி செய்திகளுள்,
அலைக்கற்றை மோசடி,கறுப்புப் பணம், இலஞ்சம், ஊழல், சுவிசு வங்கி, லோக்பால், போராட்டம், பத்மநாதசாமி, சாய்பாபா என்பன குறிப்பிடத்தக்கனவாக உள்ளன. இந்த செய்திகளுக்கான தலைப்புகள் பலவகைப்பட்டிருந்தாலும், பொருள் ஒன்றுதான்....
“செல்வத்தை மறைத்தல்“ என்பதுதான் அது.
அட மூடர்களே செல்வத்தை எங்கே மறைப்பீர்கள்..?
முழு பூசணிக்காயை சோற்றுக்குள் மறைக்கப் பார்க்கிறீர்களே முடியுமா..??
சரி மறைத்தாலும் உங்க உடல் மறைந்தபின் அதை உங்களால் எடுத்தச் செல்ல இயலுமா..??
சங்க இலக்கியத்தில் ஒரு அகப்பாடல்.....
தலைவன், தலைவியைத் திருமணம் செய்து கொள்ளாது காலம் தாழ்த்தி வருகிறான். தோழி தலைவனிடம் வாழ்வியல் நீதிகளை எடுத்துரைத்துத் தலைவியைத் தலைவன் மணம் செய்து கொள்ளத் தூண்டுகிறாள். இதுவே பாடலுக்கான களம்.
நெய்தல் நிலப் போர்களம்!
கடற்கறையில் வரிசையாக நிறுத்தப்பட்ட படகுகளே யானைப் படையாக!
அலைகளின் ஒலியே போரில் முழக்கப்படும் பறையொலியாக!
மீன்களுக்காகத் தவமிருக்கும் பறவை இனங்களே படையாகவும் கொண்டு அரசன் பகைவன் மேல் போர்தொடுத்து செல்லுவதைப் போல் வலிய கடலைச் சேர்ந்த நிலத்தை உடையவனே!!
நன்றி மறந்தவன் செல்வம்!
தனக்குக் கற்பித்த ஆசிரியன் துன்பப்படும் சூழலில் அவருக்குத் தன் கைப்பொருளைக் கொடுத்து உதவாதவனுடைய செல்வம்...?
நெறிமுறை மறந்தவன் செல்வம்!
தான் கற்ற வி்த்தையைத் தவறான வழியில் பயன்படுத்தியவனுடைய செல்வம்...?
உதவியை மறந்தவன் செல்வம்!
தான் துன்புற்றபோது தனக்கு உதவி செய்தவர் தாம் துன்புறும் போது உதவாதவனுடைய செல்வம்....?
ஆகிய இவையெல்லாம் தாமாகவே தேய்ந்து அழிந்து போகக் கூடியவை. அதுமட்டுமின்றி செய்நன்றி மறந்தவர் உடலைவிட்டு உயிர் பிரிந்தாலும் தாம் செய்த தவறுக்கான துன்பத்தை எவ்வழியிலாவது அடைவது உறுதி!!
உறவுகளை வருத்தும் செல்வம்!
உறவினர்கள் மனம் வருந்தும் படியாகத் தேடிக் குவித்த செல்வங்கள் எல்லாம் முயற்சியில்லாத மன்னனின் குடிகள் எவ்வாறு அழியுமோ அதுபோல அழிந்துபோகும்.
வாக்குத் தவறியவன்!
கொடுத்த வாக்கைக் காப்பாற்றாதவன் தானாகவே தேய்ந்துபோவான். பொய்த்த இந்தத் தீவினையானது மறுபிறப்பிலும் வாளைப்போலக் கூர்மையாக அவனை அழிக்காமல் விடாது.
ஒப்பிட்டுத் தன்மதிப்பீடு செய்துகொள்.
தலைவ..
செய்நன்றிக் கேடும், வாக்குத் தவறுதலும் எத்தகைய அழிவுக்கு வழிவகுக்கும் என்பதை இதுவரை நான் சொன்னதிலிருந்து உன்னால் உணரமுடிகிறதா..? களவுக்காலத்தில் தலைவியைக் காண நீ என்ன பாடுபட்டாய் ? அந்த நன்றியை மறக்கலாமா? தலைவியை விரைவில் மணப்பேன் என்ற வாக்குத் தவறுதல் சரியா..?
வரைவு கடாவுதல்.
தன் பகை வேந்தனோடு சினந்த அரசன், பகை வேந்தன் தம் கோட்டையை முற்றுகையிட்டபோது எத்தகைய வருத்தம் கொள்வானோ அதுபோலத் தலைவியும் உன் வரைவுக்காக் (திருமணம்) காத்திருக்கிறாள். அதனால் விரைந்து தலைவியை மணப்பாய் தலைவ! என்கிறாள் தோழி.
பாடல் இதோ..
நிரை திமில் களிறாக, திரை ஒலி பறையாக,
கரை சேர் புள்ளினத்து அம் சிறை படையாக,
அரைசு கால் கிளர்ந்தன்ன உரவு நீர்ச் சேர்ப்ப! கேள்:
கற்பித்தான் நெஞ்சு அழுங்கப் பகர்ந்து உண்ணான், விச்சைக்கண்
தப்பித்தான் பொருளேபோல், தமியவே தேயுமால், 5
ஒற்கத்துள் உதவியார்க்கு உதவாதான்; மற்று அவன்
எச்சத்துள் ஆயினும், அஃது எறியாது விடாதே காண்;
கேளிர்கள் நெஞ்சு அழுங்கக் கெழுவுற்ற செல்வங்கள்
தாள் இலான் குடியே போல், தமியவே தேயுமால்,
சூள் வாய்த்த மனத்தவன் வினை பொய்ப்பின்; மற்று அவன் 10
வாள் வாய் நன்று ஆயினும், அஃது எறியாது விடாதே காண்;
ஆங்கு
அனைத்து, இனி பெரும! அதன் நிலை; நினைத்துக் காண்:
சினைஇய வேந்தன் எயிற்புறத்து இறுத்த
வினை வரு பருவரல் போல, 15
துனை வரு நெஞ்சமொடு வருந்தினள் பெரிதே.
கலித்தொகை -149.
வரைவு நீட்டித்துழித் தலைவியது ஆற்றாமை கூறித் தலைவனை வரைவு காடாயது.
பாடல் வழியே..
1. ஒரு அகப்பாடலில் தலைவனின் நிலப்பகுதியைச் சொல்லவந்த தலைவி கடலே போர்க்களமாக, படகுகளே யானைப்படையாக, அலையே பறையாக, பறவையினங்களே படையாகக் கற்பனை செய்து காட்சிப்படுத்தியமை இயற்கையோடு இயைந்த அவர்தம் வாழ்க்கைக்குச் சான்றாகத் திகழ்கிறது.
2. செய்நன்றி மறத்தல், வாக்குத் தவறுதல் உள்ளிட்ட தவறுகளைச் சுட்டி தலைவனை உணரவைக்க எண்ணிய தோழி சொல்லும் பல்வேறு நீதிகருத்துக்கள், இன்றும் நம் வாழ்வி்ல் பின்பற்றத் தக்கனவாகவே உள்ளன.
3. செல்வம் நிலையில்லாதது, அழிந்துபோகக்கூடியது, மறைத்து வைக்கமுடியாதது என்ற தோழியின் கூற்று ஒவ்வொருவரும் தம் வாழ்வில் சிந்திக்க வேண்டியதாக உள்ளது.
முனைவர்.இரா.குணசீலன்
தமிழ் விரிவுரையாளர்
கே.எஸ்.ஆர் கலை அறிவியல் கல்லூரி
திருச்செங்ககோடு
நாமக்கல் மாவட்டம்
தமிழ்நாடு
இந்தியா.
தமிழ் விரிவுரையாளர்
கே.எஸ்.ஆர் கலை அறிவியல் கல்லூரி
திருச்செங்ககோடு
நாமக்கல் மாவட்டம்
தமிழ்நாடு
இந்தியா.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக